சனி, 10 மே, 2014

குடிகாரர்களாக வளர்ந்து வளரும் மாணவ சமூதாயம்


குடி இன்று நம்முடைய சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் மோசமான பழக்கம். அக்காலங்களில் குடிப்பவர்களை குடிகாரன் என்றும் அவர்களின் குடும்பங்களை குடிகார குடும்பம் என்று அழைத்தது நம் சமூகம். அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஊரிலிருந்து விளக்கி வைக்கப்பட்டவர்களைப் போன்று கேவலமாக பார்த்ததும் அதே சமூகம் தான். சமூகத்தின் பார்வைக்கு பயந்தே பலரும் குடி என்பது நம் சுய மரியாதையையும், குடும்ப மரியாதையும் கெடுத்துவிடுமென்று கட்டுகோப்பாக இருந்த சில காலங்களும் உண்டு.


என்றைக்குத் அறிவை மழுங்கடிக்கும் திரைப்படங்களும் , கலாச்சாரத்தை சீரழிக்கும் பல தொலைக்காட்சிகளும் மது அருந்துவதை ஒரு கட்சியாகவும், அது ஒரு ஆண்மையின் அடையாளமாகவும் சித்தரிக்க ஆரம்பித்தனவோ அன்றைக்கு நம் சமூகத்தை சனி பிடித்துகொண்டது. நடிகனை கடவுளாகப் பார்க்கும் இளைஞர் பட்டாளங்கள் , தன் நடிகன் குடிப்பதை ரசித்துத் தானும் அவரைப்போலவே குடிப்பதை பெருமையாக கருதுகின்றனர். நண்பர் என ஒரு சந்திப்பு நடந்தால் அது மதுபானத்துடன் தான் நடைபெற வேண்டும் என்ற புதுவகையான உபசரிப்பு முறை தமிழர் பழக்கவழக்கத்தில் ஒட்டிகொண்டது. குடிப்பது நாட்டிற்க்கு கேடு வீட்டிற்குக் கேடு என்று திரைப்படக் காட்சிகளில் காட்டிவிட்டு குடிக்கும் காட்சிகளைத் தாராளமாகக் காட்டிக்கொள்ளலாம் என்பது ஆபாச காட்சியைக் காட்டிவிட்டு இதுபோன்ற காட்சிகளைப் மனதில் வைத்துகொள்ளாதீர்கள் எனச் சொல்வதற்குச் சமம். சமூகச் சீர்குலைவை உண்டாக்கும் திரைப்படங்களின் தொடர் தாக்குதலால் குடிபழக்கம் எனும் பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. அரசே மது கடைகளைத் திறந்ததும், இருந்த கொஞ்ச பயமும், கட்டுப்பாடும் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. மனதளவில் குடி என்பது தவறான பழக்கமாக இருந்தால் ஏன் அரசே கடைகளைத் திறக்கிறது? எனத் தாம் குடிப்பதற்கு நியாமான காரணம் ஒன்றை துணையாக வைத்துக்கொண்டு பலரும் இன்று மதுபானத்தை குளிர்பானமாக தங்களின் உணவு பட்டியலில் சேர்த்துவிட்டனர். தினமும் குடித்துக் குடித்துக் குடும்பத்தையும் பிள்ளைகளையும் தவறான பாதைக்கு இவர்களே இழுத்து செல்ல காரணமாகிவிட்டனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் அதிர்ச்சி என்னவென்றால் பள்ளி மாணவர்களும் மதுவின் பிடியில் சிக்கி சீரழிவது தான். இன்று தன் நட்சத்திர நடிகன் குடித்தால் - தானும் குடிக்கவேண்டும், புகைத்தால் - தானும் புகைக்க வேண்டும், காதலித்தால் - தானும் காதலிக்கவேண்டும், குடித்துவிட்டு தகராறு செய்தால் - தானும் தகராறு செய்யவேண்டும். அதுதான் ரசிகனான நான் அவருக்குச் செய்யும் நன்றி கடன் என்பதைப்போல இக்கால இளைஞர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். நட்பு வட்டத்தைக்கூட மதுப்பழக்கம்தான் பிணைக்கிறது என்ற தவறான எண்ணங்களும் பரப்பப்படுகின்றன. குடி பழக்கம் இல்லை என்றால், வேலை கிடைக்காது, பெண் கிடைக்காது போன்றதொரு மனோபாவத்தில் இன்றைய இளைஞர்கள் உள்ளனர்.

20 வருங்களுக்கு முன்பு சராசரியாக நூற்றுக்கு ஐந்து பேர் குடித்தனர். இன்றோ நூற்றுக்கு எழுபது பேர் குடிக்கின்றனர். முன்பு சராசரியாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் குடி பழக்கத்திற்கு ஆளானார்கள் , இன்றோ 13 வயதிலிருந்தே குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதில் 13 வயது முதல் 23 வயதுவரை உள்ளவர்கள் மாணவர்கள் என்பது இன்னும் வேதனையான செய்தி. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள். தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.

பள்ளிக்கூடத்தில் போதையில் வந்த மாணவர்!, சரக்கு பாட்டிலுடன் வகுப்புக்கு வந்த மாணவர்!, குடிபோதையில் தேர்வெழுதிய மாணவர்!, என்று செய்திகள் அவப்போது வந்துகொண்டு தான் இருக்கின்றன. சொல்லப்போனால் பத்திரிக்கை செய்திகளில் வரும் இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை, அன்றாடம் நடக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை விட மிக அதிகமாகும். இதுபோன்ற செய்திகள் வெளியில் கசியவிடாமல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகூடப் பொறுப்பாளர்களால் மறைக்கப்படுகிறது. காரணம் - நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடும், சேர்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சம்.

சில மாதங்களுக்கு முன் நான் சொந்த ஊருக்குச் சென்றிந்தபோது, அங்கு நான் கண்ட காட்சி உண்மையில் என்னை அதிர வைத்தது. அதனாலேயே இந்தப் பதிவை பதியவேண்டும் என என எண்ணினேன். ஆம் அன்று நான் படித்த அதே கல்லூரியில்.... இன்று படிக்கும் மாணவர்கள் மதிய வேளையில் குடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் நிலையைப் பார்த்த போது, இதுபோன்ற மாணவ சமூதாயம் ஆக்க வழியில் பயணிப்பதற்கு பதில் அழிவு பாதையில் பயணிக்க நாமே காரணமாகிவிட்டோமோ என நினைக்கத்தோன்றுகிறது. மாணவர்கள் முதலில் குடிப்பதே தவறு, அதிலும் பட்டபகலில் குடித்துவிட்டு கல்லூரிக்கு செல்வது என்பது பிரச்சனையின் வீச்சு எந்தளவிற்கு உள்ளது என்று புரிந்துகொள்ளுங்கள். போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளைஞர் சமூகத்திற்கு எவ்வாறு புரியவைப்பது என்று தெரியவில்லை.

16-03-2014 அன்று நடந்த சம்பவம்
திருச்சி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைத்துள்ளது. இதைச் சுற்றி 3 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இரு கடைகளும் கல்லூரியின் மிக அருகிலேயே அமைந்துள்ளது. நான் அதே சாலையில் தானி (ஆட்டோ) ஓட்டிகொண்டிருக்கும் நண்பர் ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். மதியம் சுமார் 1.20 மணியளவில் சாலையில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் போவதுமாக இருந்தனர். சாப்பாடு நேரம் என்பதால் சாப்பிடவந்திருப்பார்கள் என்று நினைத்தேன். சரிதான் பல மாணவர்கள் சாலையின் பக்கங்களில் இருக்கும் உணவகங்களில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பிடும் கூட்டம் தவிர இன்னும் சிலர் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடை பக்கம் வருவதும் போவதுமாக இருந்தனர். சென்றவர்களில் சிலர் டாஸ்மாக் Bar ருக்குள் சரக்குப் பாட்டில்களை வாங்கிகொண்டு நுழைந்தனர். அனைவரும் சீருடையில் அணித்து இருந்ததால் இவர்கள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தான் என எளிதாக அடையாளம் காண முடிந்தது. மாணவர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவது குடிப்பது என்பது ஒன்றும் அதிசயமில்லை. ஆனால் பகலில் அதுவும் கல்லூரி நேரத்தில் என்றபோது தான் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.
 
உள்ளே சென்ற மாணவர்கள் சிறிது நேரத்தில் வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர். வரும்போது சிலர் புகை பிடித்துக்கொண்டும், சிலர் தண்ணி பாக்கெட்டை வாயில் ஊற்றி கொப்பளித்துக் கொண்டும் வந்தனர். சிறிது நேரத்தில் 8 பேர் கொண்ட மாணவர் கும்பல் ஒன்று கடை பக்கம் சென்றது, அதில் ஒருவர் மட்டும் கடைக்குச் சென்று 'புல்' சரக்கு ஒன்றை வாங்கி, அப்படியே சாலையில் செல்லும் எல்லோரும் பார்க்கும்படி கூச்சமே இல்லாமல் கையில் வைத்துகொண்டு தன் கூட்டத்துடன் அருகில் இருக்கும் காட்டுப்பக்கம் ஒதுங்கினார்கள். இவர்களுக்குப் பயம், கூச்சம் என்று எதுவுமே இல்லாமல் நடந்துகொண்டது இவர்களுடைய குடி அனுபவத்தை நன்றாகவே காட்டுகிறது. இன்னும் சிலர் குவாட்டர் சரக்குகளை வாங்கி அடிவயிற்றில் செருகிக்கொண்டு விடுதிக்கு ஓட்டமும் நடையுமாகக் கிளம்பினர். ஆமாம் சீக்கிரம் சரக்கை சாப்பிட்டுவிட்டு விடுதியில் உணவு உண்டு கல்லூரி செல்லவேண்டும் எனும் அக்கறை இவர்களின் நடையில் தெரிந்தது. மேலும் சில மாணவர்கள் கொஞ்சம் சரக்கை குடித்துவிட்டுப் பாதிச் சரக்கை (தண்ணீர் ஊற்றி) பேன்ட் பையில் வைத்துகொண்டு நடையைக் கட்டினர். இவர்கள் ஆசிரியர் பாடம் புரியவில்லை என்றால் ஒரு கட்டிங் போட்டுவிட்டு பாடத்தை கவனிக்கவோ என்னவோ தெரியவில்லை. கடையில் சில மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து கட்டிங் போட கணக்கு பார்த்துகொண்டிருந்தனர். இவர்கள் மிகவும் நல்லவர்கள் குறைவாகக் குடித்துவிட்டுப் பாடங்களைக் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமோ என தெரியவில்லை. அந்த முக்கால் மணி நேரத்தில் சுமார் 30 அல்லது 40 மாணவர்கள் கடைக்கு வந்திருப்பார்கள்.

அங்கு நடந்த நிகழ்வுகளை நான் வைத்திருந்த கைபேசியில் படம்பிடித்துவிட்டு, அரசினர் கல்லூரி இன்று இவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் பக்கத்தில் இருந்த என் நண்பரிடம் விசாரித்தேன். 

இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இதுபோன்ற மதிய நேரங்களில் சரக்கடித்து விட்டு வகுப்புக்கு செல்வது தினமும் நடக்கும் சாதாரண விசயம். இவர்களுக்குக் காசு எங்கிருத்து கிடைக்குது என்று தான் தெரியவில்லை. இவர்கள் மதிய நேரம் மட்டும் இல்லை, காலை மற்றும் மாலை நேரங்களிலும் குடிக்கின்றனர். இதைப் பற்றிக் கல்லூரியும் கண்டுக்கிற மாதிரி தெரியல, ஏன்னா இவ்வளவு மக்கள் நடமாட்டம் இருந்தும் கொஞ்சமும் பயமில்லாமல் தினமும் இதே நேரத்தில் வந்து குடிச்சுட்டு போறாங்க... அப்போ பாத்துக்குங்கோ. இதில் என்ன கூத்து என்றால் மாலை நேரங்களில் மாணவர்களும், அக்கல்லூரியின் ஆசிரியர்களும் ஒரே கடையில் பக்கத்து பக்கத்திலே குடுச்சுட்டுப் போவதுதான். 

மாணவர்கள் நிலை இப்படியிருக்க... வீடுகளில் அப்பா குடிக்கிறார்... மகனும் குடிக்கிறார். தான் வாங்கி வைத்த மதுவை மகன் குடித்துவிட்டான் என்றும், மகன் வாங்கி வைத்த மதுவை அப்பன் குடித்துவிட்டான் என்றும், அப்பனும் மகனும் தெருவில் கட்டிபிடித்துச் சண்டைபோட்டு புரளுகின்றனர். சில வீடுகளில் கணவர் வாங்கி வைத்த மதுவை மனைவிமார்கள் குடித்துவிட அதனால் இருவருக்கும் சண்டை நடக்கிறது. அப்படி என்னதான் இந்த கருமத்தில் உள்ளது குடித்து பார்க்கபோய் அதற்கு அடிமையாகும் பெண்களும் உண்டு. சரக்கு என அமிலத்தை போதையில் ராவாக உள்ளே விட்டு இறந்து போன கேவலமான சம்பவங்களும் உண்டு. குடி நாட்டிற்கு கேடு என்று தெரிந்தும் அரசே மதுவை விற்பதும், மது வீட்டிற்க்கு கேடு என்று தெரிந்தும் அதை வாங்கி குடிப்பதும் போன்ற முரண்பாடான சமூகமாக நம் சமூகம் உள்ளது.

மாணவர்கள் வருங்கால இந்தியாவின் கண்கள். வருங்காலங்களில் அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் தீவிரமானவை. சிறுவயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் இவர்கள் எவ்வாறு நாட்டையும் தன்னை நம்பியிருக்கும் வீட்டையும் காப்பாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை. மாணவர்கள் கண்ணாடி போன்றவர்கள் சமூகத்தில் நாம் அவர்களிடம் காட்டும் காட்சிகளைத் திரும்பக் காட்டுபவர்கள். இவர்களின் சமூக சூழல் குடி என்பது ஆண்மையின் இலக்கணமாக, கவுரமான பழக்கமாகக் காட்டுகிறது. குவாட்டர் சாப்பிடுபவர் திறமையற்றவர், புல் அடிப்பவரே திறமையானவர் என்றும், ஒரே வாயில் புல் பீரை சாப்பிடுபவர் தெய்வத்திற்கு நிகரானவர் எனத் தங்களின் திறமைகளை இவற்றின் மூலம் அளவீடு செய்துகொள்கின்றனர்.

இங்கு ஒட்டுமொத்த மாணவ சமூதாயமும் தவறு செய்வதாகக் கூறவில்லை. ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் தவறின் பாதைக்குச் செல்லக்கூடாது என்று தான் கூறுகிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...