வியாழன், 9 ஜூலை, 2015

சகரச்சொற்கள் யாவும் வடமொழி சொற்கள் எனும் நம்பிக்கை



தொல்காப்பியம் இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் தமிழ் இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

இதில் தமிழ் சொற்கள் இவ்வாறு தான் வழங்கப்பட வேண்டுமென்ற ஒரு வ(ழி)ரைமுறை உள்ளது, அதாவது 


க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - தொல். மொழி. 28

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே

அ, ஐ, ஔ என்னும் மூன்றலங் கடையே - தொல். மொழி. 29
மேலே உள்ள பாடலுக்கு என்ன பொருள் என்றால், "க, த, ந, ப, ம ஆகிய ஒலிகள் எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதல் வரும். சகரமும் அப்படித்தான்; ஆனால் ச, சை, சௌ - அவ்வாறு ஒரு சொல்லும் தொடங்காது. (அலங்கடைன்னா விதிவிலக்கென்று பொருள்)"


தவறுதலாகப் பொருள் கொண்டமையே மேலே சொன்ன சகர குழப்பத்திற்கு காரணம்.

சாமி சிதம்பரம் எனும் தமிழறிஞர் சொல்லும் தொல்காப்பியப் பொருள் எவ்வாறு என்றால்


க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே

அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே
அதாவது சகரக் கிளவி மற்றவை போன்றது தான். ஆனால் கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல்லே வராது"

இந்த விளக்கத்தின்படி சகரம் மொழிக்கு முதலில் வரும் என்று தெளிவாகத் தெரிகிறது. நன்னூல் மயிலைநாதர் உரையில் ஒரு பழைய மேற்கோள் வெண்பா வருகிறது. அதில் ஆணித்தரமாக, சகரம் மொழி முதலில் வருமென்று கூறப்பட்டுள்ளது.

கிழே உள்ள சொற்களைப் பாருங்கள், இவை இராமகி ஐயா கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள். இது எல்லாமே வடமொழியிலிருந்து கடனாக வாங்கியவையா?


சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சண்டை, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சகர், சரி, சருகு, சருவம், சல்லஒப்பியன் மொடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை - சட்டை, சவட்டு - சமட்டு - (சமட்டி - சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு-சறுக்கு, சன்னம்
பாவாணர் அவர்கள் "தொல்காப்பியம் ஒரு இலக்கண நூலே அன்றி, அகரமுதலி அன்று. அதில் ஒரு சொல் இல்லாவிடில் அது தமிழே இல்லை என்பது மொழியறிவும் உலக அறிவும் இன்மையையே காட்டும்." என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஒரு தமிழ்-தமிழ் அகர முதலி (சண்முகம் பிள்ளை; தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம்) யை நாம் எடுத்துகொண்டால் அதில் ககர முதற் சொற்கள் கிட்டத்தட்ட 3200 இருப்பதைப் பார்க்கலாம். இதே போலச் சகர முதற்சொற்கள் 1800 க்கும் மேல் இருக்கிறது. ககரமுதற் சொற்களைப் போல 56 % சகர முதற் சொற்கள் இருக்கும்போது அவற்றைக் கடன் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்!

செ, சொ என்ற ஒலிகள் தமிழில் முதலில் வரும்போது, 'ச' என்று மட்டும் முதலில் வராதாம். அது எப்படி? ஆகாரம் முதலில் வருமானால் அகரம் வராது என்பது ஒலியியலுக்கு எப்படிப் பொருந்தும்? பழந்தமிழர்களின் நாக்கு என்ன வளையலையா? "சாவு என்ற சொல்லை ஏற்கலாம், சாவு>சாவம்>சவம் என்ற சொல்லை ஏற்க முடியாது" என்றால் தமிழ் பேசும் மனிதனுக்கு மூளை என்ற உறுப்பு இருந்தும் என்ன பயன்?


சகரம் பற்றி நன்னூல் மயிலைநாதர் பாடலை மேற்கோளாக கொள்வோம்
சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை” (எழு. 51)
சக்கை, சட்டம், சடுதி, சண்டை, சதை, சப்பு, சமன், சமர், சமை, சருச்சரை, சரேல், சல்லி, சலசல, சலி, சவம், சவை, சழி, சள்ளை, சளை முதலிய பல சகர சொற்கள் செந்தமிழ்ச் சொற்கள். இதனால் சகரம் மொழிக்கு முதலில் வராது என்ற கூற்றே முற்றிலும் தவறு.

மேலும் சகர சொற்களை பற்றி தொல்காப்பியர் மீது பழியை சுமத்தக்கூடாது என்றும், ஒலைசுவடியை படித்து தவறாக புரிந்துகொண்டு உரை எழுதியவர்கள் மீது தான் பழியை சுமத்தமுடியுமென்றும் கூறுகிறார்.
“க த ந ப ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே” (தொல். மொழி. 28)

“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ, ஐ, ஒள வெனும் மூன்றலங் கடையே” (தொல். மொழி. 29)
இவ்விரு சூத்திரங்களும் ஏட்டுச்சுவடி இருந்த காலத்தில் இருந்தே ஒரே சூத்திரமாக தான் திகழ்ந்தன. சுவடியில் உள்ளதை உள்ளபடி படித்தால் புரியும்.

“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அவை ஒளஎன்னும் ஒன்றலங் கடையே”

க் - த் - ந் - ப் - ம் என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும் எல்லா உயிர் எழுத்துக்களுடன் கூடி மொழிக்கு முதாலாக வரும். ச் என்ற மெய்யெழுத்தும் அந்த ஐந்து மெய் யெழுத்துகளைப் போலவே எல்லா உயிர் எழுத்துக்களுடன் கூடி மொழிக்கு முதாலாக வரும். ஆனால் க் - ச் - த் - ந் - ப் - ம் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் ஒள என்னும் உயிரெழுத்துடன் கூடி மொழிக்கு முதலாக வாராது என்பதாம்.

மொத்தத்தில் சகரம் மொழிக்கு முதலில் வராது என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாத கருத்தாக இருக்கிறது. இப்படியொரு விதி தமிழில் இருக்குமென்றால், தமிழிலிருந்து பிறந்த மற்ற மொழிகளில் ஏன் இந்த விதி இல்லை என்ற கேள்வியும் எழுகிறது. சகரம் பற்றி தவறான புரிதலுக்கு தொல்க்கப்பியரை கைகாட்டுவதை இனி நிறுத்திக்கொள்ளவேண்டும்/திருத்திக்கொள்ளவேண்டும்.

தமிழ் என்பது பலருக்கும் கில்லுகீரையாகிவிட்டது. தவறான பொருள் படித்த  காரணத்தால் மூட நம்பிக்கை போல ஒரு பாட நம்பிக்கையை வைத்துக்கொண்டு இல்லாத ஒரு விதியை இருப்பதாக, சகர தமிழ்ச்சொற்களை எல்லாம் வடமொழிக்கு அவர்களே விரும்பாவிட்டாலும் நாம் விருப்பாக வாரி வாரி வழங்கி வருகிறோம்.

கூட்டத்தில் இருக்கும் தன் அன்னையை அடையாளம் தெரியாமல் இது என் அன்னை என்பதற்கு அடையாளமென்ன? என அடுத்தவரிடம் ஆதாரம் கேட்கிறோம். தள்ளையை (தாய்)  தெரியாத பிள்ளையும் தமிழை தெரியாத தமிழனும் மண்ணிற்கு பாரம் என சொல்லவேண்டியதில்லை.

(நன்றி : முனைவர் இராமகி ஐயா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...